கோலாலம்பூர், ஜூலை 17– கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்பில் விவாதிப்பதற்கு ஏதுவாக நாடாளுமன்றம் உறுப்பினர்களுக்கு விரிவான அளவு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த கோரிக்கையை தாம் கடிதம் வாயிலாக மக்களவை சபாநாயகர் டத்தோ அஸ்ஹார் அஜிசான் ஹருணுக்கு அனுப்பியுள்ளதாக அவர் சொன்னார்.
நாடாளுன்றத்தில் விவாதத்தின் போது உறுப்பினர்கள் பரிந்துரைகளையும் கருத்துக்களையும் முன்வைப்பதற்கு வாய்ப்பு வழங்கினால் மட்டுமே நோய்த் தொற்றுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் ஆக்கத் தன்மையை அறிந்து கொள்ளவும் குறைபாடுகள் இருப்பின் அதனை சரி செய்யவும் வாய்ப்பு ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
எந்தவொரு விவகாரத்தையும் சரி பார்த்து சமன் செய்யும் நாடாளுமன்றத்தின் பணியை யாரும் முடக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
எந்த விஷயம் குறித்தும் விவாதிக்காமல் வெறுமனே தலையாட்டுவதற்காக மட்டும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்பதையும் அவர் நினைவுறுத்தினார்.