ஷா ஆலம், ஜூலை 17- கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக மரணமடைந்தவர்களின் குடும்ப வாரிசுகளிடமிருந்து நேற்று வரை 413 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
அவற்றில் குடும்ப உறுப்பினர்கள் அல்லது வாரிசுகளிடமிருந்து பெறப்பட்ட 12 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டதாக சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.
விண்ணப்பம் அங்கீக்கப்பட்ட 14 வேலை நாட்களுக்குள் அந்த உதவித் தொகை சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரரின் வங்கி கணக்கில் சேர்க்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
விண்ணப்பதாரர்கள் தங்களைப் பற்றிய தகவலைகளை முழுமையாக தர வேண்டும் என்று அவர் சிலாங்கூர் கினிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு 1,000 வெள்ளி உதவித் தொகை வழங்குவதற்கான விண்ணங்கள் கடந்த திங்கள்கிழமை தொடங்கி வரவேற்கப்படுகிறது. வரும் ஆகஸ்டு மாதம் 12ஆம் தேதி வரை இந்த உதவித் தொகைக்கு விண்ணப்பம் செய்யலாம். மேல் விபரங்களை https://www.selangorprihatin.com என்ற அகப்பக்கம் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம்.
கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 1,000 வெள்ளி உதவித் தொகை வழங்கும் திட்டத்திற்காக கித்தா சிலாங்கூர் 2.0 உதவித் தொகுப்பின் கீழ் 15 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த மாதம் 9 ஆம் தேதி அறிவித்திருந்தார்.