ஷா ஆலம், ஜூலை 20- சிலாங்கூரில் ஊராட்சி மன்றங்களால் நிர்வகிக்கப்படும் நான்கு மின்சுடலைகளில் கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்த முஸ்லீம் அல்லாதோரின் நல்லுடல்களை தகனம் செய்யும் பணி ஒருமுகப்படுத்தப்படும்.
தகன நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கும் மருத்துவமனை சவக்கிடங்குகளில் உள்ள பிரேதங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கும் ஏதுவாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.
ஷா ஆலம் மாநகர் மன்றம், பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம், சுபாங் ஜெயா மாநகர் மன்றம், கிள்ளான் நகராண்மைக்கழகம் ஆகிய நான்கு ஊட்ராட்சி மன்றங்களில் மின்சுடலைகள் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
சிப்பாங் நகராண்மைக்கழக பகுதியில் மேலும் ஒரு மின்சுடலையை நிர்மாணிக்கும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக தடைபட்டுள்ள அதன் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்த நாங்கள் அனுமதி கோரியுள்ளோம்.
அந்த மின்சுடலை தயாரானவுடன் சிலாங்கூரில் சிலாங்கூரில் இறந்தவர்களின் பிரேதங்களை தகனம் செய்யும் பணியை மேலும் ஆக்ககரமான முறையில் மேற்கொள்ள இயலும் என அவர் சொன்னார்.
எங்களின் இந்த உத்தேச ஒருங்கிணைப்பு நடவடிக்கையின் வழி தகன நடவடிக்கைகளை விரைவுபடுத்த முடியும். உதாரணத்திற்கு, கிள்ளான் நகராண்மைக் கழகம் வசமுள்ள மூன்று மின்சுடலைகளில் இரண்டு பழுதான நிலையில் ஒன்று மட்டுமே செயல்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் மற்ற ஊராட்சி மன்ற சுடலைகளில் தகனம் செய்வதற்கான ஏற்பாட்டைச் செய்ய முடியும் என்றார் அவர்.
கோவிட்-19 நோயினால் இறந்தவர்களின் நல்லுடல்களை தகனம் செய்யும் பணியை குறைந்த கட்டணத்தில் மேற்கொள்வது தொடர்பில் தனியார் மின்சுடலை நிர்வாகத்தினருடன் மாநில அரசு பேச்சு நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.