ஷா ஆலம், ஜூலை 25- தங்களுக்கு காலி ஊசி செலுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் கொள்வோர் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான சோதனையை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இரண்டாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்ற 30 நாட்களுக்குப் பின்னர் இந்த சோதனையை லைசென்ஸ் பெற்ற மருத்துவ ஆய்வகங்களில் மேற்கொள்ளலாம் என்று புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ அப்துல் ஜாலில் ஹசான் கூறினார்.
தடுப்பூசி பெற்றவர்களில் பலர் இன்னும் தங்களைத் தொடர்பு கொண்டு இவ்விவகாரம் தொடர்பில் விளக்கம் கேட்பதோடு புகாரும் செய்வதாக அவர் சொன்னார்.
தங்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவில்லை என சந்தேகிக்கும் தரப்பினர் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியின் அளவைத் தெரிந்து கொள்ள சோதனை மேற்கொள்ளலாம். இதன் மூலம் போலீசார் அடுத்தக் கட்ட விசாரணையை மேற்கொள்ள இயலும் என்று அவர் அறிக்கை ஒன்றில் கூறினார்.
இதனிடையே, தேசிய கோவிட்-19 தடுப்பூசி இயக்கம் தவிர்த்து தனிப்பட்ட முறையிலோ இணையம் வாயிலாகவோ தடுப்பூசி விற்பனை தொடர்பான போலி அழைப்புகள் பெற்றால் அது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கும்படி அப்துல் ஜாலில் கேட்டுக் கொண்டார்.