கோலாலம்பூர், ஆக 2- நாடாளுமன்றக் கூட்டத் தொடரை ஒத்தி வைக்கும் பிரதமர் டான்ஸ்ரீ மொகிடின் யாசினின் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளன.
பிரதமரின் இந்த முடிவு கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம் மற்றும் நாடளுமன்ற ஜனநாயக நடைமுறைக்கு மதிப்பளிக்காத வகையிலும், மாமன்னரின் பத்திரிகை அறிக்கையை புறக்கணிக்கும் வகையிலும் உள்ளதாக எதிர்க்கட்சிகள் வெளியிட்ட கூட்டறிக்கை கூறியது.
கடந்த ஜூலை 29 ஆம் தேதி வரை நாடாளுமன்றத்தை உட்படுத்திய கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை 0.9 விழுக்காடாக மட்டுமே உள்ள நிலையில் இன்று நடைபெறவிருந்த கூட்டத் தொடரை ரத்து செய்ய உத்தரவிட்ட மொகிடினின் நடவடிக்கை தங்களுக்கு வருத்தத்தை அளிப்பதோடு அதனை தாங்கள் கடுமையாக ஆட்சேபிப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவித்தது.
இதன் அடிப்படையில் பிரதமர் மொகிடின் யாசினும் அவரது அமைச்சரவை உறுப்பினர்களும் கௌரவமான முறையில் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் அறிக்கை வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கூட்டறிக்கையில் கெஅடிலான் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அமானா கட்சியின் தலைவர் முகமது சாபு, ஜசெக தலைமைச் செயலாளர் லிம் கிட் சியாங் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் இந்த மூன்று முன்னணி தலைவர்கள் தவிர்த்து கினபாலு பெர்சத்து மேம்பாட்டு கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ பங்ளிமா வில்ப்ரட் மாடியஸ் தங்காவ், மலேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் தலைவர் சைட் சடிக் சைட் அப்துல் ரஹ்மான், சரவா பெர்சத்து கட்சியின் உறுப்பினர் பாரு பியான், சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்லி மாலிக் ஆகியோரும் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.