கோல சிலாங்கூர், ஆக 2- நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்ட காலகட்டத்தில் கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட சுமார் ஆயிரம் பேருக்கு புக்கிட் மெலாவத்தி தொகுதி சார்பில் உணவுக் கூடைகள் வழங்கப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து தினசரி குறைந்தது பத்து உதவி கோரும் விண்ணப்பங்களை தாங்கள் பெற்று வருவதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜூவாய்ரியா ஜூல்கிப்ளி கூறினார். முன்பு, இந்த உணவுக் கூடைகள் உதவி தேவைப்படும் அனைவருக்கும் வழங்கப்பட்ட வேளையில் தற்போது கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்று அவர் சொன்னார். உதவித் தேவைப்படுவோரிடமிருந்து விண்ணப்பம் கிடைத்த அன்றைய தினமே உணவுப் பொருள்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் சமர்ப்பிக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார். இங்குள்ள டேவான் பண்டார் பாருவில் உள்ள செல்வேக்ஸ் தடுப்பூசி மையத்திற்கு வருகை புரிந்த போது செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார். இணையம் வாயிலாக கல்வியைத் தொடர்வதில் சிரமத்தை எதிர் நோக்கும் 15 மாணவர்களுக்கு தொகுதி சார்பில் மடிக்கணினிகள் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2021/02/melawathi149050609_3630471953709480_6594606214911181655_n.jpg)