ஷா ஆலம், ஆக 2- சிலாங்கூரில் கடந்த இரு நாட்களாக தடுப்பூசி பெற்றவர்கள் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தை தாண்டியுள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிப்பு மாநில அரசுக்கு கிடைத்த வெற்றி என்று வர்ணித்த மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி, இதன் வழி தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் கடந்த ஜூலை மாதம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு எட்டப்பட்டு விட்டதாக கூறினார். தடுப்பூசி பெறுவோரின் தினசரி எண்ணிக்கையை 135,000 ஆக உயர்த்த கடந்த ஜூலை மாதம் இலக்கு நிர்ணயித்திருந்தோம். எனினும், அதையும் தாண்டி கடந்த மாதம் 30 ஆம் தேதி 159,000 பேருக்கும் 31 ஆம் தேதி 152,000 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றார் அவர். சிலாங்கூர் அரசினால் மேற்கொள்ளப்படும் செல்வேக்ஸ் திட்டத்தில் தடுப்பூசி பெறுவோரின் எண்ணிக்கை இதில் சேர்க்கப்படவில்லை எனக் கூறிய அவர், செல்வேக்ஸ் திட்டத்தின் வாயிலாக தினசரி 15,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்றார். தடுப்பூசி திட்டத்தை மிகச் சிறப்பாக மேற்கொண்டு வரும் அனைத்து முன்களப் பணியாளர்களுக்கும் தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் சொன்னார்