கோலாலம்பூர், ஆக 3 – அரசாங்க மருத்துவமனைகளில் பணிபுரியும் 23000 க்கு மேற்பட்ட ஒப்பந்த மருத்துவர்கள் விவகாரம், நாட்டு மக்களும் அரசாங்கமும் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டிய விவகாரம்.
தங்கள் உயிரை பணையம் வைத்து சேவையாற்றும் மருத்துவர்களை நீண்ட நாட்களாக அரசாங்கம் அலட்சியம் செய்துவந்துள்ளதையே இந்த மறியல் காட்டுகின்றது. அரசாங்கம் ஒப்பந்த மருத்துவர்களின் விவகாரத்தை அவர்களின் வாழ்வாதரங்களை தொட்ட ஒரு விவகாரமாக மட்டுமில்லாமல், நாட்டிற்கு ஏற்படுத்தியுள்ள அறிவுசார் சொத்து இழப்பையும், ஒவ்வொரு மலேசியரின் உயிர் மற்றும் உன்னத வாழ்வுக்கு சிறப்பாக சேவையாற்றும் மருத்துவ சேவைக்கு நாடு அளிக்கும் அங்கிகாரத்துக்கான அளவு கோளாக பார்க்க வேண்டும்.
இம்மாதம் 26ஆம் தேதி நாடு தழுவிய அளவில் மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியலில் இருபதுக்கும் மேற்பட்ட அரசாங்க மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் பங்கேற்றனர்.
ஒப்பந்த மருத்துவர்களுக்கு நிரந்த பணி நியமனம், நிரந்தர மருத்துவர்களுக்கு இணையான சம்பளம், சலுகைகள் மற்றும் விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து மருத்துவர்கள் இந்த மறியல் போராட்டத்தை நடத்தினர்.
கோலாலம்பூர் மருத்துவமனை, கிள்ளான், துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனை, ஷா ஆலம் மருத்துவமனை, மலாக்கா மருத்துவமனை, கோத்தா பாரு, ராஜா பெரெம்புவான் ஜைனாப் மருத்துவமனை உள்பட நாட்டிலுள்ள பல்வேறு மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் இந்த பேராட்டத்தில் பங்கு கொண்டனர். இவர்களில் பலர் கருப்பு உடைகளை அணிந்திருந்ததோடு பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.
இந்த மறியலின் போது எஸ்.ஒ.பி. எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகள் மீறப்படாமலிருப்பதை உறுதி செய்ய போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நாட்டிலுள்ள ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் எதிர்நோக்கி வரும் இப்பிரச்னைக்கு ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தீர்வு காணப்படாமலிருப்பதை கருத்தில் கொண்டு மறியல் போராட்டத்தில் தாங்கள் ஈடுபடவிருப்பதாக ஒப்பந்த மருத்துவர்கள் முன்னதாக அறிவித்திருந்தனர்.