ஷா ஆலம், ஆக 12- கோலக் கிள்ளான், பண்டார் சுல்தான் சுலைமான் தொழில்பேட்டைப் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் பொருள் மறுசுழற்சி தொழிற்சாலையில் நேற்று இரவு தீவிபத்து ஏற்பட்டது.
இரவு 9.00 மணியளவில் ஏற்பட்ட இத்தீச்சம்பவம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் நோர்ஹாசாம் காமிஸ் கூறினார்.
தீயை முழுமையாக அணைப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறிய அவர், எனினும், இத்தொழிற்சாலையில் பிளாஸ்டிக் பொருள்கள் அதிகம் உள்ளதால் தீயை முழுமையாக கட்டுப்படுத்துவதற்கு சிறிது காலம் பிடிக்கும் என்றார்.
அருகிலுள்ள கட்டிடங்களுக்கு தீ பரவாமல் கட்டுப்படுத்தி விட்டோம். தீயின் தாக்கமும் தணிந்து வருகிறது. அதிர்ஷ்டவசமாக இச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. சம்பவத்தின் போது அக்கட்டிடத்தில் இருந்தவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறி விட்டனர் என்றார் அவர்.
அத்தொழிற்சாலையின் 90 விழுக்காட்டுப் பகுதி தீயில் அழிந்து விட்டது. தீயை அணைக்கும் பணியில் 60 வீரர்களும் அதிகாரிகளும் ஈடுபட்டனர். தீக்கான காரணம் மற்றும் சேத மதிப்பு குறித்து தற்போதைக்கு எதுவும் கூற முடியாது என அவர் தெரிவித்தார்.