ஷா ஆலம், ஆக 13– இவ்வாண்டு ஜூன் மாதம் 9 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட கித்தா சிலாங்கூர் 2.0 உதவித் தொகுப்பின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட 55 கோடியே 15 லட்சத்து 60 ஆயிரம் வெள்ளித் தொகையில் சுமார் 7 முதல் 8 கோடி வெள்ளி வரை பல்வேறு நலத் திட்டங்களுக்காக இதுவரை செலவிடப்பட்டுள்ளது.
கோவிட்-19 பெருந் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில் கித்தா சிலாங்கூர 2.0 உதவித் தொகுப்பின் கீழ் 25 திட்டங்கள் அமல்படுத்தப்பட்டதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இத்திட்டங்களின் மேம்பாட்டை மாநில அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாக நேற்று இயங்கலை வாயிலாக நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
அத்திட்டங்களில் மோரட்டோரியம் எனப்படும் கடனைத் திரும்பச் செலுத்துவதை ஒத்தி வைக்கும் சலுகை, கல்விக் கடனுவி விலக்களிப்பு போன்றவை முழுமையடைந்துள்ள நிலையில் உணவுக் கூடை விநியோகம் உள்ளிட்ட திட்டங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் அவர்.
மேலும் சில திட்டங்கள் இன்னும் தொடக்கப்படவில்லை எனக் கூறிய அவர், சிலாங்கூர் மக்களுக்கான இலவச இணைய தரவு சலுகைத் திட்டமும் அதில் அடங்கும் என்றார்.
இந்த உதவித் திட்டங்களுக்காக இதுவரை விநியோகிக்கப்பட்ட நிதி மற்றும் பயன்பெற்றவர்கள் எண்ணிக்கை குறித்த விபரங்கள் இரு வாரங்களுக்கு ஒரு முறை நடைபெறும் மாநில பொருளாதார திட்டமிடல் குழு கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மூன்றாவது கித்தா சிலாங்கூர் திட்டத்தை அறிவிப்பதற்கான வாய்ப்பு உள்ளதா? என வினவப்பட்ட போது, அத்தகைய திட்டம் எதுவும் இல்லை என்றும் அதற்கு மாறாக, மாநில அரசின் வரவு செலவுத் திட்டத்தில் அது குறித்து விவரிக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.