கோம்பாக், ஆக 15- கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட சுங்கை துவா தொகுதி மக்களுக்கு உணவுக் கூடைகள் வழங்க கடந்த ஜனவரி முதல் இதுவரை இரண்டு லட்சம் வெள்ளிக்கும் மேல் செலவிடப்பட்டுள்ளது.
உணவுக் கூடைத் திட்டத்திற்காக மட்டும் இரண்டு லட்சம் வெள்ளிக்கும் மேல் செலவிடப்பட்ட வேளையில் இதர தரப்பினரின் உதவியுடன் மேலும் பல உதவித் திட்டங்கள் தொகுதி மக்களுக்கு வழங்கப்பட்டதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இன்று நடைபெற்ற கோம்பாக் வட்டார மக்கள் பிரநிதிநிதிகளிடம் உணவுப் பொருள்களை ஒப்படைக்கும் நிகழ்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
தெனாகா நேஷனல் பெர்ஹாட், சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம், மலேசிய செம்பிறைச் சங்கம் மற்றும் லையன்ஸ் கிளப் வழங்கிய உணவுப் பொருள்கள் சுமார் இரண்டாயிரம் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதாக சுங்கை துவா சட்டமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.
கித்தா சிலாங்கூர் 2.0 உதவித் தொகுப்பின் கீழ் மாநிலத்திலுள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளும் உணவுக் கூடைத் திட்டத்திற்கு கூடுதலாக 50,000 வெள்ளியைப் பெறும் என்று அமிருடின் கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி அறிவித்திருந்தார்.
இது தவிர, சிரமத்தில் உள்ளவர்களுக்கு உதவும் நோக்கில் மாநிலத்திலுள்ள பக்கத்தான் ஹராப்பான் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா 30,000 வெள்ளி வழங்கப்பட்டது.