ஷா ஆலம் ஆக 16- கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் இதுவரை சிலாங்கூர் மாநிலத்தில் உயர் அதிகாரி ஒருவர் உள்பட ஒன்பது போலீஸ்காரர்கள் பலியாகியுள்ளனர்.
இக்காலக்கட்டத்தில் சிலாங்கூர் மாநில போலீஸ் தலைமையகத்தில் பணியாற்றும் போலீஸ்காரர்களின் குடும்பங்களைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்களும் உயிரிழந்துள்ளதாக மாநில போலீஸ் தலைவர் டத்தோ அர்ஜூனைடி முகமது கூறினார்.
இது தவிர, அதிகாரிகள் உள்பட 331 போலீஸ்காரர்கள் நோய்த் தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட வேளையில் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மேலும் 321 பேரும் தனிமைப்படுத்தப்பட்டனர் என்றார் அவர்.
கடந்தாண்டு மார்ச் மாதம் 16ஆம் தேதி முதல் நேற்று வரை கோவிட்-19 நோய்த் தொற்று உறுதி படுத்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள், போலீஸ்காரர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 910 ஆகும். நோய்க்கான அறிகுறி காரணமாக தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 4,332 பேர்களாவர் என்று இங்குள்ள மாநில போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த சனிக்கிழமை வரை 2,063 குற்றப்பதிவுகள் வெளியிட்டப்பட்டதாக கூறிய அவர், மாநில அல்லது மாவட்ட எல்லைகளைக் கடக்க முயன்றது, மைசெஜாத்ரா செயலியில் பதிவிடத் தவறியது, கூடல் இடைவெளியைக் கடைபிடிக்காதது, போன்ற குற்றங்களுக்காக அதிக குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்டன என்றார்.