ஷா ஆலம், ஆக 23- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றும் அதனால் மரண எண்ணிக்கையும் அதிகரித்ததற்கு எஸ்.ஒ.பி. எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளைப் கடைபிடிப்பதில் பொதுமக்கள் காட்டிய அலட்சியப் போக்கே காரணம் என்று மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் கூறினார்.
சிலாங்கூர் மாநிலத்தில் மிக அதிகமான கோவிட்-19 சம்பவங்களும் உயிரிழப்புகளும் பதிவானது மிகவும் வேதனையளிப்பதாக உள்ளது என்று சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் கூறினார்.
பொருளாதாரம் நலிவடைந்து மக்கள் சிரமத்தில் இருக்கும் சூழலில் கோவிட்-19 நோய்த் தொற்றால் உறவுகளை இழந்து தவிக்கும் குடும்பங்களையும் பெற்றோர்களை இழந்து தவிக்கும் பிள்ளைகளையும் பார்க்கும் போது மனதுக்கு மிகவும் வேதனையாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த பிரச்னைக்கு எந்த தரப்பினரையும் நான் குறை கூறவிரும்பவில்லை. ஆயினும், நோய்த் தொற்று அதிகரிப்பதற்கும் மரண எண்ணிக்கை உயர்வு காண்பதற்கும் எஸ்.ஒ.பி. விதிகளை பின்பற்றுவதில் பொதுமக்கள் காட்டிய அலட்சியப் போக்கு காரணமாக அமைந்துள்ளது என்றார் அவர்.
மாநில மற்றும் மாவட்ட எல்லைகளைக் கடப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை மக்கள் பின்பற்றத் தவறியதால் நிலைமை மேலும் மோசமடைந்து புதிய தொற்று மையங்கள் உருவாக காரணமாக அமைந்தது என அவர் சொன்னார்.
இது தவிர அரசியல்வாதிகள், பிரமுகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்கள் அந்தஸ்தை பயன்படுத்தி விதிமுறைகளை மீறியது நிலைமையை மேலும் மோசமாக்கியது என்றும் அவர் குறிப்பிட்டார்.