ஷா ஆலம், 24 ஆக: சிலாங்கூர் அட்வான்ஸ் திட்டம், நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை (PKP) காரணமாக பணப்புழக்கப் பிரச்சினையை அனுபவித்து வந்த 900 நிறுவனங்களைச் சேர்ந்த 50,000 நபர்களின் வேலைகளைக் காப்பாற்றியது என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.
முந்தைய பரிவுமிக்க சிலாங்கூர் (ப்ரிஹாத்தின்) தொகுப்பில் அறிமுகப் படுத்தப் பட்ட முயற்சியின் பயனாக, கோவிட் -19 தொற்றின் போது கித்தா சிலாங்கூர் தொகுப்பு மூலம் அந்த பரிவுமிக்க திட்டம் தொடர்ந்தது. அதனால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு பண வசதிகளை தொடர்ந்து வழங்கியதன் மூலம் அதில் 900 நிறுவனங்களுக்கும் 50,000 ஊழியர்களும் பயனடைந்ததாக டத்தோஸ்ரீ அமிருதீன் ஷாரி கூறினார்.
“சிலாங்கூர் அட்வான்ஸ் என்னும் அந்த திட்டத்தின் வழி 900 நிறுவனங்களை சார்ந்த 50,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை இழப்பதிலிருந்து காப்பாற்றியுள்ளது. நிதி ஓட்டம் இல்லாவிட்டால் தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்படலாம்” என்று அவர் இன்று சிலாங்கூர் மாநில சட்டசபையில் கூறினார்.
அவர் ஒரே நேரத்தில் நான்கு மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார், அவர்கள் கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு உதவ அரசு எடுத்த முயற்சிகள் மற்றும் மாநிலத்தின் பொருளாதாரம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து விளக்கம் கேட்டனர்.
சுவா வெய் கியாட்- ரவாங் தொகுதி, டாக்டர் டரோயா அல்வி (செமந்தா) தொகுதி, லாவ் வெங் சான் பந்திங் தொகுதி, மற்றும் டத்தோ ஷரிடான் பின் அலியாஸ் சுங்கை பூரோங் தொகுதி, ஆகியோரால் கேள்விகள் சமர்ப்பிக்கப் பட்டன. மாநிலத்தின் பொருளாதாரம் தொடர்ந்து மேம்படுவதையும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (எஸ்எம்இ) உதவுவதையும் உறுதி செய்வதற்காக கடந்த ஆண்டு முதல் பல்வேறு தொழில் மலர்ச்சி தொகுப்புகள் மூலம் பல்வேறு முயற்சிகள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன என்பதை இது காட்டுகிறது.
அமிருடினின் கூற்றுப்படி, மாநில அரசின் வணிக டிஜிட்டல் மயமாக்கல் என்பது நன்கு அறியப்பட்ட தளங்களில் ஆன்லைனில் வியாபாரம் செய்யும் 70,000 SME நிறுவனங்களுக்கு உதவியது, இதன் மூலம் “RM7 மில்லியன் செலவிடப்பட்டதால், வருவாய் RM100 மில்லியன் நேரடி விற்பனையை பதிவு செய்ய முடிந்தது மற்றும் RM1 பில்லியனுக்கும் அதிகமான பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தியது,” என்று அவர் கூறினார்.