கோலாலம்பூர், ஆகஸ்ட் 24: மலேசியாவின் தேசிய ஆசிரியர் சங்கம் (NUTP) பொது தடுப்பூசி மையத்தில் அல்லாமல் ஒரு சிறப்பு தடுப்பூசி மையத்தின் வழி பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்க அரசை கேட்டுக்கொள்கிறது.
அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் வாங் ஹெங் சுவான் கூறுகையில், இந்த நடவடிக்கை பள்ளி குழந்தைகள் கோவிட் -19 தொற்றுநோயால் பாதிக்கப்படும் அபாயத்தைக் குறைப்பதாகும். “பள்ளி குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு மாவட்ட அல்லது மண்டப ரீதியாக பல பள்ளிகளைக் கொண்ட PPV களை உருவாக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சகத்திற்கு (MOH) முன்மொழிய NUTP கல்வி அமைச்சிடம் வேண்டுகோள் விடுக்கிறது.
“இந்த நடவடிக்கையின் வழி பள்ளி மாணவர்கள் பல கட்டங்களாக தடுப்பூசிகளைப் பெறுவதை எளிதாக்கும் மற்றும் எந்த தடுப்பூசிகளையும் பெறாத மாணவர்களை அடையாளம் காணவும் முடியும்” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.
அதைத் தவிர, ஆசிரியர்கள் கல்வியல் முன் கள பணியாளர்களாக இருப்பதால் அவர்களும் முழுமையாக தடுப்பூசி பெற்று அவர்களின் மாணவர்களும் முழுமையாக தடுப்பூசிகள் பெறுவதை உறுதி செய்வார்கள் என்றும் அவர் நம்புகிறார்.
அக்டோபர் 3 ஆம் தேதி பள்ளிகள் படிப்படியாகத் தொடங்குவதற்கு முன்பாக, பள்ளி ஊழியர்கள், கேண்டீன் ஊழியர்கள், பள்ளி துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் பாது காவலர்கள் போன்றவர்களுக்கும் முழுமையான தடுப்பூசிகள் கிடைப்பதை உறுதி செய்ய NUTP அரசுக்கு அறிவுறுத்தியது.
பள்ளி திறக்கும் போது, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளூர் சமூகத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், கோவிட் -19 தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காகவும் MOE நடமாட்ட கட்டுபாடு ஆணையை (SOP) மேம்படுத்த முடியும் என்று வாங் நம்புகிறார்.
முன்னதாக, முன்னாள் கல்வி அமைச்சர் டத்தோ டாக்டர் ராட்ஸி ஜிடின் தேசிய மீட்சித் திட்டத்தின் (பிபிஎன்) இரண்டாம் கட்டம் மற்றும் மூன்றாம் கட்டத்திலுள்ள மாநிலங்களுக்கான பள்ளிகளைத் திறக்கும் தேதி அக்டோபர் 3 ஆம் தேதி என்று அறிவித்தார், இது முன்னர் அறிவிக்கப்பட்டபடி செப்டம்பர் 1 லிருந்து ஒத்திவைக்கப்பட்டது.
எனினும் ராட்ஸி கூறுகையில், மீட்சித் திட்டத்தின் முதல் கட்டத்தில் உள்ள மாநிலங்களுக்கு பள்ளி திறப்பு அனுமதிக்கப் படவில்லை மற்றும் இரண்டாம் கட்ட மாநிலங்களுக்கு, பள்ளி திறப்பு தேர்வு வகுப்புகளுக்கு மட்டுமே என்றும் மூன்றாம் கட்டத்திலுள்ள மாநிலங்கள், முழு திறப்புக்கும் அனுமதிக்கப்படுவதாக அறிவித்தார்.