ஷா ஆலம், ஆக 26- சிப்ஸ் எனப்படும் பெடுலி சேஹாட் காப்புறுதி திட்டத்தின் வழி கடந்த மாதம் 31ஆம் தேதி வரை 67,348 உறுப்பினர்கள் பயனடைந்துள்ளனர்.
இத்திட்டத்திற்கு வருடாந்திர மானியமாக 4 கோடியே 24 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை 3 கோடியே 76 லட்சம் வெள்ளி செலவிடப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.
எஞ்சியத் தொகை மூன்றாம் கட்ட கோவிட்-19 பரிசோதனை இயக்கத்திற்கு பயன்படுத்தப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த திட்டத்தின் மூலம் கடந்தாண்டில் 79,275 பேர் பயன்பெற்றதாக மாநில சட்டமன்றக் கூட்டத்தில் அவர் சொன்னார்.
குறைந்த வருமானம் பெறுவோர் சிகிச்சை, ஆலோசக சேவை மற்றும் மருந்துகளைப் பெறுவதற்கு வகை செய்யும் நோக்கில் இந்த பெடுலி சேஹாட் காப்புறுதி திட்டம் கடந்த 2017ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
மாதம் 2,000 வெள்ளிக்கும் குறைவாக வருமானம் பெறும் சுமார் 85,000 குடும்பங்கள் அடிப்படை மருத்துவ சேவையை பெறுவதற்கு ஏதுவாக அத்திட்டம் கடந்தாண்டில் தரம் உயர்த்தப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 500 வெள்ளி வரையிலும் திருமணமாகாதவர்களுக்கு 200 வெள்ளி வரையிலும் சிகிச்சைக்கான செலவுத் தொகை ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இது தவிர மரணம் அல்லது நிரந்தர முடத்தன்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5,000 வெள்ளி, மரண சகாய நிதியாக 1,000 வெள்ளி, கடும் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5,000 வெள்ளி மற்றும் இயற்கை மரணங்களுக்கு 5,000 வெள்ளி இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது.