ஷா ஆலம், ஆக 26- ஐந்து லட்சம் தடுப்பூசிகளை இதர மாநிலங்களுக்கு இரவலாக தரும் சிலாங்கூர் மாநில அரசின் திட்டத்திற்கு மாநில சட்டமன்றத்தில் இன்று ஆதரவு தெரிவிக்கப்பட்டது.
நாட்டில் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட குழுமத்தை உருவாக்கும் முயற்சிக்கு உதவக்கூடிய சரியான திட்டம் இது என்று கோத்தா அங்கிரிக் சட்டமன்ற உறுப்பினர் நஜ்வான் ஹலிமி கூறினார்.
நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் முயற்சியில் முக்கியப் பங்கினை ஆற்றும் இந்த தடுப்பூசித் திட்டத்தின் வெற்றியை உறுதி செய்வதில் பொதுமக்களும் அரசாங்கத்திற்கு முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
மாநில அரசின் இந்த உதவியின் மூலம் நாடு முழுவதும் தடுப்பூசியைப் பெறுவோரின் எண்ணிக்கையை உயர்த்த முடியும் எனக் கூறிய அவர், இத்ட்டத்திற்கு பொதுமக்களும் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றார்.
இது அரசாங்கத்தின் பணி மட்டுமல்ல. மேலும் அதிகமானோர் தடுப்பூசியைப் பெறுவதற்கு ஏதுவாக அனைத்து நிலையிலும் விழிப்புணர்வு ஏற்படுவது அவசியமாகும் என்றார் அவர்.