ஷா ஆலம், ஆக 28- கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக சிலாங்கூரிலுள்ள ஹோட்டல் துறை பணியாளர்களில் சுமார் 60 விழுக்காட்டினர் வேலை இழந்துள்ளனர்.
மேலும் 40 விழுக்காட்டினருக்கு சம்பளமில்லா விடுமுறை அல்லது 20 முதல் 50 விழுக்காடு வரை சம்பள குறைப்பு அமல்படுத்தப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.
கோவிட்-19 நோய்த் தொற்று மற்றும் அதன் எதிரொலியாக அமல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக மாநிலத்தில் இதுவரை 10 ஹோட்டல்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மலேசிய ஹோட்டல் நடத்துநர்கள் சங்கத்தின் சிலாங்கூர் மாநிலப் பிரிவு நடத்திய ஆய்வில் இந்த விபரங்கள் தெரிய வந்துள்ளதாக மாநில சட்டமன்றத்தில் நேற்று விவாதங்களை முடித்து வைத்து உரையாற்றுகையில் அவர் தெரிவித்தார்.
பெருந்தொற்று பரவல் காரணமாக பாதிப்பை எதிர்நோக்கியுள்ள ஹோட்டல் நடத்துநர்களின் சுமையை குறைக்கும் வகையில் மனை வரி, நில வரி மற்றும் பெர்மிட் கட்டணத்தை குறைப்பது அல்லது அதனை செலுத்துவதற்கான காலக் கெடுவை நீட்டிப்பது போன்ற சலுகைகளை வழங்குவது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருவதாக அவர் மேலும் சொன்னார்.
கடந்தாண் மார்ச் மாதம் கோவிட்-19 நோய்த் தொற்று பரவத் தொடங்கியது முதல் இதுவரை நாடு முழுவதும் சுமார் 100 ஹோட்டல்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக மலேசிய ஹோட்டல் சங்கத்தின் நிர்வாக அதிகாரி யாப் லிப் செங் கடந்த மே மாதம் கூறியிருந்தார்.