ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

மின்மினிப் பூச்சிகள் சரணாலயத்தை தரம் உயர்த்த எம்.பி.கே.எஸ் நடவடிக்கை

கோலா சிலாங்கூர், ஆக 29– இங்கு சுற்றுப் பயணிகளை பெரிதும் ஈர்க்கக்கூடிய மையமாக விளங்கும் மின்மினிப் பூச்சிகள் சரணாலயம் தரம் உயர்த்தப்படவுள்ளது. நகராண்மைக் கழகமாக அண்மையில் தரம் உயர்த்தப்பட்ட கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகத்தின் (எம்.பி.கே.எஸ்.) பிரதான திட்டங்களில் ஒன்றாகவும் இது விளங்குகிறது.

அதிகமான பொது மக்கள் இப்பகுதிக்கு வருவதை ஊக்குவிக்கும் வகையில் மண்டம் அமைப்பது மற்றும் படகுத்துறையில் மிதவைப் பாலத்தை நிர்மாணிப்பது ஆகிய திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக நகராண்மைக் கழகத் தலைவர் ரஹிலா ரஹ்மாட் கூறினார்.

அதே சமயம், வருகையாளர்களின் வசதிக்காக கழிப்பறைகளும் படகுத் துறையும் தரம் உயர்த்தப்படும். மேலும், தேவைகளின் அடிப்படையில் அவ்வப்போது மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வருவோம் என்று அவர் குறிப்பிட்டார்.

கோல சிலாங்கூர் மாவட்ட மன்றம் நகராண்மைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் இப்பகுதிக்கு மேலும் அதிகமான வருகையாளர்களை ஈர்ப்பதற்கு ஏதுவாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றார் அவர்.

இம்மாவட்டத்தில் உள்ள இதர சுற்றுலா மையங்களான ஸ்கை மிரர் மற்றும் புக்கிட் மெலாவத்தியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இயற்கை அழகு நிறைந்த சுற்றுலா மையங்களை ஊக்குவிக்கும் முயற்சிகள் சமூக ஊடகங்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகளின் வாயிலாக தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.


Pengarang :