மாஸ்கோ, ஆக 30– உலகில் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 கோடியே 63 லட்சத்தை எட்டிய வேளையில் அந்த பெருந்தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 45 லட்சமாக உயர்ந்துள்ளது.
ஜோன்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கொரோனா வைரஸ் ஆய்வு மையம் வெளியிட்ட இன்று அதிகாலை 3.30 மணி வரையிலான புள்ளி விபரம் இந்த எண்ணிக்கையை காட்டுகிறது.
உலகில் 2 கோடியே 63 லட்சத்து 56 ஆயிரத்து 046 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. மரண எண்ணிக்கை 45 லட்சத்து 309 ஆக உயர்ந்துள்ளது என அந்த ஆய்வு மையத்தை மேற்கோள் காட்டி ரஷியாவின் ஸ்புட்னிக் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்தாண்டு மார்ச் மாதம் உலகில் பரவத் தொடங்கிய கோவிட்-19 நோய்த் தொற்று உலகில் எந்த நாடுகளிலும் இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் கடும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நோய்த் தொற்றினால் 3 கோடியே 87 லட்சம் அமெரிக்கர்கள் பாதிக்கப்பட்ட வேளையில் 637,500 பேர் மரணமுற்றனர்.
அதிகாரப்பூர்மாக அறிவிக்கப்பட்டதைக் காட்டிலும் மேலும் அதிகமானோர் இந்நோய்த் தொற்றுக்கு அமெரிக்காவில் பலியாகியுள்ளதாக அந்நாட்டின் தலைசிறந்த தொற்று நோய் நிபுணரான அந்தோணி ஃபவுச்சி கூறினார்.
அமெரிக்காவில் 48 விழுக்காட்டிற்கும் மேற்பட்டோர் இன்னும் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ளாத நிலையில் அந்நாட்டில் தினசரி கோவிட்-19 எண்ணிக்கை சராசரி 151,000 ஆக உயர்ந்து வருகிறது.