ஷா ஆலம், ஆக 31- பொது முடக்க காலத்தில் அனைத்துலக வாணிக மற்றும் தொழிலியல் அமைச்சின் அனுமதி பெற்ற தொழிற்சாலைகளை சிலாங்கூர் அரசு மூடவில்லை.
லைசென்ஸ் விதிமுறைகளை சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள் முறையாக பின்பற்றுகிறதா என்பதை உறுதி செய்யும் பணியில் மட்டுமே ஊராட்சி மன்றங்கள் ஈடுபட்டதாக ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.
அமைச்சின் அனுமதி பெற்ற தொழிற்சாலைளின் நடவடிக்கையை மாநில அரசு மூடாது. ஆயினும், ஊராட்சி மன்றங்கள் வழங்கிய லைசென்சில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதை மட்டுமே அது உறுதி செய்யும் என்றார் அவர்.
சட்டமன்றத்தில் இன்று பண்டமாரான் தொகுதி உறுப்பினர் லியோங் தக் சீ எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.
தேசிய பாதுகாப்பு மன்றத்தின் உத்தரவை மீறிய தொழிற்சாலைகளை மூடுவது அல்லது அவற்றுக்கு எதிராக அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா? என லியோங் கேள்வியெழுப்பியிருந்தார்.