ஷா ஆலம், ஆக 31- எதிர் வரும் காலங்களில் சிலாங்கூர் சட்டமன்றக் கூட்டத்தை “ஹைப்ரிட்“ முறையில் நடத்துவதற்கு ஏதுவாக நிரந்தர சட்ட விதிகளில் திருத்தம் செய்த முதல் மாநிலமாக சிலாங்கூர் விளங்குகிறது.
கோவிட்-19 போன்ற எதிர்பாராத அசம்பாவிதங்கள் எதிர்காலத்தில் நிகழும் பட்சத்தில் சட்டமன்றக் கூட்டத்தை ஹைப்ரிட் முறையில் (உறுப்பினர்களின் நேரடி பங்கேற்பு மற்றும் இயங்கலை வாயிலாக) நடத்துவதற்கு ஏதுவாக நிரந்தர விதி 21 மற்றும் 69(4) ஆகியவை திருத்தப்படுவதாக சட்டமன்ற சபாநாயகர் இங் சுயி லிம் கூறினார்.
மாநில சட்டமன்றத்தில் இந்த திருத்தம் நிறைவேற்றப்பட்டு அடுத்தக் கட்ட நடவடிக்கைக்காக விதிகள் மீதான நிலைக்குழுவின் பார்வைக்கு அனுப்பப்படும் அவர் சொன்னார்.
தனது தலைமையிலான அந்த நிலைக்குழுவில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்பட அறுவர் பங்கேற்றுள்ளதாக கூறிய அவர், இந்த திருத்தம் மீது அக்குழு விரிவான ஆய்வினை மேற்கொண்டு அங்கீகாரத்திற்காக அடுத்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் அதனைத் தாக்கல் செய்யும் என்றார் அவர்.
மாநில சட்டமன்றக் கூட்டத்தின் முடிவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.
எதிர்பாராத சூழ்நிலைகளின் போது ஆகக்கடைசி தீர்வாக மட்டுமே இந்த ஹைப்ரிட் முறையிலான கூட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.