புத்ரா ஜெயா, ஆக 31- நாட்டின் 64வது தேசிய தின விழா முழு நாட்டுப் பற்று உணர்வுடன் புதிய இயல்பில் கொண்டாடப்பட்டது.
தேசிய தினக் கொண்டாட்டத்தின் மைய நகரங்களான புத்ரா ஜெயா உள்ளிட்ட முக்கிய இடங்களில் மக்கள் ஒன்று கூடி 2021 ஆம் ஆண்டு தேசிய தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
குறிப்பாக புத்ரா ஜெயாவில் நடைபெற்ற தேசிய நிலையிலான தேசிய தினக் கொண்டாடத்தில் இடம் பெற்ற அரச மலேசிய ஆகாயப் படையின் வான் சாகசக் காட்சி வருகையாளர்களை பெரிதும் ஈர்த்தது.
டத்தாரான் புத்ரா, டத்தாரன் மெர்டேக்கா மற்றும் ஸ்ரீ பெர்டானா பாலம் போன்ற இடங்களில் மக்கள் கூடி போர் விமானங்கள் நடத்திய சாகசக் காட்சிகளை கண்டு களித்தனர்.
நாட்டுப்பற்றை புலப்படுத்தும் வகையில் வருகையாளர்கள் கைகளில் தேசிய கொடியை ஏந்தியிருந்ததோடு முகக்கவசம் அணிதல், கூடல் இடைவெளியைக் கடைபிடித்தல் மற்றும் நெரிசலைத் தவிர்த்தல் போன்ற எஸ்.ஒ.பி. நடைமுறைகளை முறையாகவும் கடைபிடித்தனர்.
கோவிட்-19 அபாயம் கருதி எந்நேரமும் எஸ்.ஒ.பி. விதிகளை கடைபிடிக்கும்படி காவல் துறையினர் ரோந்து வாகனங்களில் உள்ள ஒலிபெருக்கி வாயிலாக தொடர்ந்து அறிவுரை கூறி வந்தனர்.