ஷா ஆலம், செப் 9- கின்ராரா சட்டமன்றத் தொகுதி ஏற்பாட்டில் 1,000 கோவிட்-19 பரிசோதனைக் கருவிகள் இலவசமாக வழங்கப்படும்.
கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக குடும்பத்துடன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தங்கள் உடல் நிலை குறித்து அறிந்து கொள்வதற்கு உதவக்கூடிய இந்த கருவிகளை மாநில அரசு தொகுதிக்கு விநியோகித்துள்ளதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.
இந்த உபகரணப் பெட்டியில் உமிழ்நீர் வழி கோவிட்-19 நோய்த் தொற்றைக் கண்டறியும் கருவி, ஆக்சிஜன் அளவை அறியும் கருவி, வைட்டமின் சி 550 மி.கிராம், கிருமி நாசினி, முகக்கவசம் ஆகிய பொருள்கள் உள்ளதாக அவர் சொன்னார்.
இந்த கோவிட்-19 பரிசோதனைக் கருவிகளைப் பெற விரும்புவோர் 03-80821661 அல்லது 011-25816296 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
கோவிட்-19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்காக மாநில அரசு 60,000 சுய பரிசோதனைக் கருவிகளை தயார் செய்துள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த மாதம் 12 ஆம் தேதி கூறியிருந்தார்.
இந்த கருவிகள் அனைத்து 56 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.