ஷா ஆலம், செப் 13– சிலாங்கூர் அரசின் நடமாடும் செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டம் நாளை செவ்வாய்க்கிழமை உலு பெர்ணம் தொகுதியில் நடைபெறும்.
மாநில மக்கள் தடுப்பூசி பெறுவதிலிருந்து விடுபடாமலிருப்பதை உறுதி செய்யும் நோக்கில் நடத்தப்படும் இந்த தடுப்பூசித் திட்டம் உலுபெர்ணம் சமூக மண்டபத்தில் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கோம்பாக் செத்தியா தொகுதி நிலையிலான நடமாடும் தடுப்பூசித் திட்டம் கம்போங் நக்கோடா சமூக மண்டபத்தில் வரும் புதன் கிழமை நடைபெறும்.
சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் வெளியிட்டுள்ள விளக்கப்படத்தில் இந்த விபரங்கள் இடம் பெற்றுள்ளன.
காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும் இந்த தடுப்பூசி இயக்கத்தில் அந்நிய நாட்டினர் உள்பட அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என அந்த விளக்கப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாநிலத்திலுள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளில் இந்த நடமாடும் தடுப்பூசி இயக்கத்தை மேற்கொள்ள மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.