ஷா ஆலம், செப் 12- இரு கட்சிகள் சார்ந்த அணுகுமுறையின் கீழ் கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் பொருளாதாரப் பிரச்னைகளைக் கையாள்வதற்கும் நாட்டில் நிலைத்தன்மையை ஏற்படுத்துவதற்கும் மத்திய அரசும் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியும் புரிந்துணர்வு ஏற்படுத்திக் கொண்டுள்ளன.
நாட்டில் புதிய அரசியல் சூழலை உருவாக்குவதற்கு முன்னுரிமை மற்றும் முக்கியத்துவம் அளிப்பதில் இரு தரப்பும் கவனம் செலுத்தும் என்று மத்திய அரசும் பக்கத்தான் கூட்டணியும் வெளியிட்ட கூட்டறிக்கை கூறியது.
பல கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் மத்திய அரசுக்கும் பக்கத்தான் கூட்டணிக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை இறுதி செய்யும் கட்டத்தை இரு தரப்பும் எட்டியுள்ளன.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வழி நாட்டில் புதிய அரசியல் சூழலை உருவாக்குவதில் இரு தரப்பும் முன்னுரிமை அளிக்கும். நாட்டின் நிர்வாகத்தில் குறிப்பாக, நாடாளுமன்ற சீர்திருத்தங்களை மேற்கொள்வதிலும் அரசு நிர்வாகத்தில் உருமாற்றங்களையும் மாறுதல்களையும் ஏற்படுத்துவதிலும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அந்த அறிக்கை கூறியது.
இன்று மாலை 5.00 மணிக்கு நாடாளுமன்றக் கட்டிடத்தில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்த த்தில் கையெழுத்திட இரு தரப்பும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.