ஷா ஆலம், செப 28- யாயாசான் சிலாங்கூர் அறவாரியத்தின் கல்வி கடனுவிக்கு இம்மாதம் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யும்படி சிலாங்கூர் மாநில உயர்கல்வி மாணவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
சிலாங்கூர் மாநில அரசுக்குச் சொந்தமான அரசாங்க மற்றும் தனியார் கல்விக்கூட மாணவர்கள் இந்த யாயாசான் சிலாங்கூர் கல்விக் கடனுதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
மாற்றத்திற்குட்பட்ட இந்த கடனுதவியை பெறும் சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் கல்வியில் சிறப்பான அடைவு நிலையைப் பதிவு செய்யும் பட்சத்தில் அவர்களுக்கு 50 அல்லது 100 விழுக்காட்டு கடன் தொகையை திரும்பச் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படும் என அவர் சொன்னார்.
தற்போது கல்வி பயின்று வரும் மாணவர்கள் அல்லது டிப்ளோமா, பட்டப்படிப்பு நிலையில் முழுநேரமாக கல்வியைத் தொடர்வதற்கு வாய்ப்பு கிடைத்த மாணவர்கள் இந்த கடனுதவிக்கு விண்ணப்பிக்கலாம் என யாயாசான் சிலாங்கூர் அறவாரியம் முன்னதாக கூறியிருந்தது.
மலேசிய பிரஜைகளாகவும் சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருப்பவர்களுக்கு மட்டுமே இந்த கடனுதவித் திட்டத்தில் வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அது தெரிவித்தது.
இந்த கடனுதவிக்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 1 ஆம் தேதி முதல் வரவேற்கப்படுகின்றன. www.yayasanselangor.org.my என்ற அகப்பக்கம் வாயிலாக இந்த கடனுதவிக்கு விண்ணப்பிக்கலாம்.