ஷா ஆலம் செப் 29- கோவிட்-19 நோய்த் தொற்றை உமிழ்நீர் சோதனை வழி விரைவாக கண்டறியக்கூடிய 1,000 கருவிகளை கின்ராரா தொகுதி சேவை மையம் வட்டார மக்களுக்கு குறைந்த விலையில் வழங்கவுள்ளது.
இந்த உபகரணங்கள் பத்து வெள்ளி மதிப்பில் தொகுதி மக்களுக்கு பிரத்தியேகமாக வழங்கப்படவுள்ளதாக அதன் சட்டமன்ற உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.
எனினும், குடும்பத்திற்கு பத்து கருவிகள் என்ற அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும். இக்கருவிகளுக்கான தேவை அதிகமாக இருக்கும் பட்சத்தில் அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். பொதுமக்களின் சுமையைக் குறைப்பதில் இக்கருவிகளின் விநியோகம் ஓரளவு துணை புரியும் என நம்புகிறோம் என்றார் அவர்.
இந்த சுயப் பரிசோதனைக் கருவிகளை பெற விரும்புவோர் 011-25816296 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.
கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் உடல் நிலை குறித்து அறிந்து கொள்வதற்கு உதவக்கூடிய இத்தகைய 1,000 சுயப் பரிசோதனைக் கருவிகளை மாநில அரசு இத்தொகுதிக்கு வழங்கியுள்ளது.
உமிழ்நீர் வழி கோவிட்-19 நோய்த் தொற்றைக் கண்டறியும் கருவி தவிர்த்து ஆக்சிஜன் அளவு கருவி, மருந்துகள், வைட்டமின் சி மாத்திரைகள், முகக்கவசம், கிருமி நாசின் உள்ளிட்ட பொருள்களையும் இந்த உபகரணப் பெட்டி உள்ளடக்கியுள்ளது.