கோலாலம்பூர், செப் 29- நாட்டிலுள்ள பெரியவர்களில் 1 கோடியே 99 லட்சத்து 12 ஆயிரத்து 566 பேர் அல்லது 85.1 விழுக்காட்டினர் கோவிட்19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.
மேலும் 2 கோடியே 19 லட்சத்து 93 ஆயிரத்து 709 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சு கோவிட்நாவ் எனும் அதிகாரப்பூர்வ அகப்பக்கம் வாயிலாக தெரிவித்தது.
இது தவிர, 12 முதல் 17 வயது வரையிலான 33,050 இளையோர் அல்லது 1.1 விழுக்காட்டினர் முதலாவது டோஸ் தடுப்பூசியை பெற்றுள்ளதாக அது மேலும் கூறியது.
பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் நேற்று இளையோர் மற்றும் பெரியவர்களில் 329,722 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர்களில் 168,734 பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியையும் 160,998 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் பெற்றனர்.
இதனிடையே, நேற்று முன்தினம் நள்ளிரவு 11.59 மணி வரை கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்புடைய 240 மரணச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன. இதனுடன் சேர்த்து அந்த பெருந்தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 25,935 ஆக உயர்ந்துள்ளது.