கோலாலம்பூர், செப் 30- தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தை (பிக்) அமல்படுத்துவதற்கு அரசாங்கம் கடந்த ஆகஸ்டு மாதம் வரை 280 கோடி வெள்ளியைச் செலவிட்டுள்ளது.
பல்வேறு அரசு நிறுவனங்களை உள்ளடக்கியிருந்த இந்த செலவினத்தில் 260 கோடி வெள்ளி தடுப்பூசி கொள்முதல் செய்வதற்கும் 21 கோடி வெள்ளி தனியார் மருத்துவர்களுக்கு வழங்குவதற்கும் 1 கோடியே 90 லட்சம் வெள்ளி சுகாதார அமைச்சின் தளவாடங்களை அதிகரிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டதாக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஆடாம் பாபா கூறினார்.
அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்துறை துறை அமைச்சுக்கு 100 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்ட வேளையில் அத்தொகையில் 31 கோடியே 40 லட்சம் வெள்ளியை அது செலவிட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
வாடகை, சுத்தம் செய்தல், உபகரணங்கள், தடுப்பூசி மையப்பணியாளர்களுக்கு உணவு, உதவித் தொகை உள்ளிட் சமூக நலத் திட்டங்கள் ஆகியவற்றுக்கு அத்தொகை பயன்படுத்தப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
தடுப்பூசித் திட்டத்திற்கு பொதுமக்களைப் பதிவு செய்யும் பணிக்காக அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் 44 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்தின் வெற்றியை உறுதி செய்வதில் பங்காற்றிய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி என அவர் தெரிவித்தார்.
பிக் தடுப்பூசித் திட்டத்தின் அமலாக்கம் குறித்து பண்டான் உறுப்பினர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிசா வான் இஸ்மாயில் மக்களைவையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அமைச்சர் இவ்விபரங்கள வெளியிட்டார்.