ஷா ஆலம், செப் 30- லங்காட் 2 நீர் சுத்திகரிப்பு மைய திட்ட நிர்வாகத்தை நிதியமைச்சுக்கு சொந்தமான அதன் துணை நிறுவனமான பெங்குருசான் எசட் ஆயர் பெர்ஹாட் (பி.ஏ.ஏ.பி.) நிர்மாணிப்பதாக சிலாங்கூர் மாநில அரசு இன்று தெரிவித்தது.
அந்த திட்டத்தின் முழு அமலாக்க நடவடிக்கையில் மாநில அரசு நேரடியாக பங்கு கொள்ளவில்லை என்று அடிப்படை வசதிகள், பொது வசதி மற்றும் நவீன விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.
திட்டத்திற்கான நிலத்தை ஆர்ஜிதம் செய்வது மாநில அரசின் நுட்பக் குழு வெளியிடும் பெர்மிட் ஆகிய விவகாரங்களில் மட்டுமே மாநில அரச சம்பந்தப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
லங்காட் 2 நீர் சுத்திகரிப்பு மையத்தின் நிர்மாணிப்பில் ஏற்பட்ட தாமதம் காரணமாக ஏற்படும் நீர் விநியோகப் பற்றாக்குறைப் பிரச்னையைச் சமாளிக்க மாநில அரசு செமினி 2 நீர் சுத்திகரிப்பு மையம், லபோஹான் டாகாங் நீர் சுத்திகரிப்பு மையம் ஆகியவற்றின் நிர்மாணிப்புக்கு நிதி ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
சுங்கை சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு மையத்தின் மூன்றாம் கட்டத்தை உள்ளடக்கிய நீர் தடுப்பணை 2 திட்டத்தை மேற்கொள்வதற்காக மாநில அரசு நிதியமைச்சிடமிருந்து கடன் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மாநில அரசு அமல்படுத்தும் இத்திட்டங்கள் மூலம் சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ரா ஜெயாவில் நீர் விநியோகப் பற்றாக்குறை பிரச்சனை ஏற்படாமலிருப்பதை உறுதி செய்ய முடியும் என்றார் அவர்.