ஷா ஆலம், செப் 30- கடந்தாண்டு மார்ச் மாதம் தொடங்கி அமல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.) காரணமாக கட்டுமானத் துறை 4,200 கோடி வெள்ளி இழப்பை எதிர்நோக்கியதாக பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபடில்லா யூசுப் கூறினார்.
கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான பி.கே.பி.1.0 அமலாக்கத்தின் போது 2,400 கோடி வெள்ளியும் இவ்வாண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரை அமலில் இருந்த பி.கே.பி.3.0 ஆணையின் போது 1,800 கோடி வெள்ளியும் இழப்பாக பதிவு செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.
கட்டுமானப் பொருள்களின் விலையேற்றம், அந்நியத் தொழிலாளர்கள் நாடு திரும்ப முடியாததால் ஏற்பட்ட ஆள்பலப் பற்றாக்குறை மற்றும் தொழிலாளர்கள் பணிக்குத் திரும்புவதற்கு முன்னர் தடுப்பூசியை செலுத்த வேண்டிய நிர்பந்தம் ஆகிய காரணங்களால் இந்த இழப்பு ஏற்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும், தொழிலாளர்களுக்கு தங்குமிட வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற புதிய நிபந்தனை இத்துறை பெரும் இழப்பை எதிர்நோக்குவதற்கு காரணமாக அமைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான வழிவகைகளை ஆராய்வதற்காக சம்பந்தப்பட்டத் தரப்பினருடன் அமைச்சு பேச்சு நடத்தி வருவதாக மக்களவையில் கேள்வி நேரத்தின் போது அவர் கூறினார்.