ஷா ஆலம், அக் 1- பன்னிரண்டாவது மலேசியத் திட்டத்தின் கீழ் அடுத்த ஐந்தாண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்திற்கு உந்து சக்தியாக விளங்கக் கூடியவை என அடையாளம் காணப்பட்டுள்ள எட்டு துறைகளில் சிலாங்கூர் மாநிலத்தின் விண்வெளித் துறையும் ஒன்றாக விளங்குகிறது.
அத்துறையின் வளர்ச்சியை உறுதி செய்வதற்காக பராமரிப்பு, பழுதுபார்ப்பு, தயாரிப்பு மற்றும் பொருத்துதல் ஆகிய நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று கடந்த மாதம் 27 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்து துறைகளிலும் பொருளாதார வளர்ச்சியை உந்தச் செய்து புதிய பொருளாதார வளங்களை அடையாளம் காண்பது அரசாங்கத்தின் முக்கிய இலக்காக விளங்குவதாக பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.
வியூக முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் கூடுதல் பலனைத் தரக்கூடியவையாக மின்னியல், மின்சாரம், சேவை, விண்வெளி, அனைத்துலக சேவை, ஹாலால், ஆக்கத்திறன், சுற்றுலா, விவேக விவசாயம் ஆகிய துறைகள் விளங்குகின்றன என்று அவர் சொன்னார்.
இந்த இலக்கை அடைவதற்காக அரசாங்கம் விண்வெளித் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக கடனுதவி நிதியை தயார் செய்யும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
சிலாங்கூர் மாநிலத்தைப் பொறுத்த வரை விண்வெளித் துறை தவிர்த்து, சீரான போக்குவரத்தை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்படும் தைப்பிங் மற்றும் பந்திங்கை இணைக்கும் மேற்கு கரை நெடுஞ்சாலைத் திட்டம் வரும் 2024 ஆம் ஆண்டில் பூர்த்தியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.