உலு லங்காட், அக் 4- நீர் மாசுபாடு ஏற்படாமலிருப்பதை உறுதி செய்ய சுங்கை பெக்கான் செமினி ஆற்றை அடிக்கடி கண்காணிக்கும் பணியை காஜாங் நகராண்மைக் கழகம் நதிகளின் நண்பர்கள் எனும் தன்னார்வலர் அமைப்புடன் இணைந்து மேற்கொள்ளும்.
நீர் மாசுபாடு ஏற்படும் அளவுக்கு ஆறுகளில் திட்டமிட்டே குப்பைகளை கொட்டும் பொது மக்களின் செயல் மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக உள்ளது என்று காஜாங் நகராண்மைக் கழகத் தலைவர் நஜ்முடின் ஜெமாய்ன் கூறினார்.
குப்பைகள் பிளாஸ்டிக் பைகளில் முறையாகக் கட்டப்பட்டு ஆறுகளில் வீசப்பட்டுள்ளது எங்கள் கண்காணிப்பு நடவடிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொறுப்பு மக்கள் மத்தியில் குறைந்து காணப்படுவதை இது காட்டுகிறது. அவர்கள் ஆறுகளை குப்பைத் தொட்டிகளாக கருதுகின்றனர் என அவர் மேலும் சொன்னார்.
ஆகவே, நதிகளின் நண்பர்கள் இயக்கத்துடன் இணைந்து ஆறுகளை சுத்தப்படுத்தும் மற்றும் கண்காணிக்கும் பணியை தாங்கள் மேற்கொள்ளவுள்ளதோடு ஆறுகள் மாசுபடாமல் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நடவடிக்கையிலும் ஈடுபடவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
செமினி நகரில் இன்று நடைபெற்ற சுங்கை செமினி பரிவுத் திட்டத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
குப்பைகளை ஆறுகளில் வீசும் செயல் காரணமாக நீர் சுத்திகரிப்பு மையங்களில் பணிகள் தடைபட்டு மக்களுக்கு நீர் விநியோகத் தடை ஏற்படுவதாகவும் அவர் கூறினார்.