ஷா ஆலம், அக் 5- மக்கள் கூட்டணி (பக்கத்தான் ஹராப்பான்) நிர்வாகத்தின் போது தாபோங் ஹாஜி எனப்படும் யாத்திரீகர் நிதி வாரியத்தை மீட்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டதை தேசிய தலைமை கணக்காய்வாளர் ஒப்புக் கொண்டுள்ளார்.
அப்போதைய அரசாங்கத்தின் முயற்சிகளை 2019 ஆம் ஆண்டிற்கான கணக்கு தணிக்கை அறிக்கை அங்கீகரித்துள்ளதோடு அனைத்துலக நிதி தர நிர்ணயத்திற்கேற்ப அந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளதாக முன்னாள் பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் முஜாஹிட் யூசுப் ராவா கூறினார்.
அந்த மறுசீரமைப்பு நடவடிக்கையின் வாயிலாக 1995 ஆம் ஆண்டு தாபோங் ஹாஜி உயர்நெறி பின்பற்றல் மற்றும் செயலாக்கத்தை மறுபடியும் நிலை நாட்ட முடிந்தது.
தலைமை கணக்காய்வாளரின் இந்த அங்கீகாரம், தாபோங் ஹாஜியின் நிதி நிர்வாகம் 2017ஆம் ஆண்டை விட ஆரோக்கியமானதாக இருந்ததை புலப்படுத்துகிறது என்றார் அவர்.
அந்த ஆண்டில் நிதி இடைவெளி 410 கோடி வெள்ளியாகவும் மதிப்பு வீழ்ச்சி சீரற்றதாகவும் இழப்பு வெளிப்படுத்தப்படாமலும் இருந்ததாக அவர் சொன்னார்.