MEDIA STATEMENTNATIONALPBT

வீட்டுப் பணிப்பெண் சித்ரவதை- தாய்-மகள் கைது 

ஷா ஆலம், அக் 5- இந்திய பிரஜையான வீட்டுப் பணிப்பெண் ஒருவருக்கு பல மாதங்களாக சம்பளம் தராததோடு அடித்தும் சித்ரவதை செய்த புகாரின் பேரில் தாய் மற்றும் மகள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

கடந்த மாதம் 19 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி கிள்ளான் தபால் நிலையத்தின் நடைபாதையில் அடைக்கலம் புகுந்த அந்த பணிப்பெண் பொதுமக்களின் உதவியுடன் நேற்று முன்தினம் போலீசில் புகார் அளித்ததாக வட கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி விஜய ராவ் கூறினார்.

26 வயதுடைய அந்த அப்பெண் இந்தியாவிலிருந்து இங்கு வந்து கடந்த 19 மாதங்களாக அந்த வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் சொன்னார்.

வேலைப் பளுவை தாங்க முடியாதது, பல மாதங்களாக சம்பளம் தரப்படாதது ஆகிய காரணங்களால் அப் பண் வீட்டை விட்டு தப்பியோடியுள்ளார். அதோடு மட்டுமின்றி வீட்டு உரிமையாளரின் மகள் மின்சார வயரைக் கொண்டு தமது தொடையில் தாக்கியதாகவும் அப்பெண் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார் என்று விஜய ராவ் கூறினார்.

விசாரணை முடியும் வரை அப்பெண் தற்போது டாமன்சாராவில் உள்ள பராமரிப்பு இல்லம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

இப்புகார் தொடர்பில் 49 மற்றும் 28 வயதுடைய தாய் மற்றும் மகள் ஆகியோர் விசாரணைக்காக நான்கு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், 2007 ஆம் ஆண்டு மனித வர்த்தக எதிர்ப்பு மற்றும் அந்நிய பிரஜைகள் கடத்தல் சட்டத்தின் கீழ் இச்சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.


Pengarang :