கோல சிலாங்கூர், அக் 6- இங்குள்ள பாசீர் பெனாம்பாங் மார்க்கெட் தரம் உயர்த்தப்பட்டப் பின்னர் அங்கு வியாபாரம் புரியும் 95 விழுக்காட்டு வணிகர்கள் பயனடைந்துள்ளதாக ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.
சுமார் 750,000 வெள்ளி செலவிலான இந்த தரம் உயர்த்தும் திட்டம் கடந்த மார்ச் மாதம் முற்றுப் பெற்றதாக நேற்று இந்த மார்க்கெட்டை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் சொன்னார்.
இதன் மூலம் அந்த மார்க்கெட்டிற்கு வரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சௌகர்யமான சூழல் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
நீர் விநியோகம், தரை மற்றும் கூரைகள், விற்பனைக்கான பொருள்களை வைக்கும் மேசை, நடைபாதை, கழிப்பறை உள்ளிட்ட பகுதிகளை சீரமைப்பதை இந்த திட்டம் உள்ளடக்கியிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
இந்த மார்க்கெட்டை பழுதுபார்க்கும் பணிக்கு 750,000 வெள்ளி செலவிடப்பட்டது. அதில் 600,000 வெள்ளியை மாநில அரசு வழங்கிய வேளையில் எஞ்சிய 150,000 வெள்ளியை கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகம் ஏற்றுக் கொண்டது என்றார் அவர்.
மொத்தம் 95 கடைகளை உள்ளடக்கிய அந்த மார்க்கெட்டை சீரமைக்கும் பணி கடந்த 2019 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.