ஷா ஆலம், அக் 10- கோவிட்-19 நோய்த் தொற்று பரவிய கடந்த ஈராண்டு காலத்தில் பொதுமக்களுக்கு உதவுவதற்காக 110 கோடி வெள்ளி செலவில் பல்வேறு உதவித் திட்டங்களை மாநில அரசு அமல்படுத்தியுள்ளது.
இரு பொருளாதார மீட்சித் திட்டங்கள், கித்தா சிலாங்கூர் திட்டங்கள், சிலாங்கூர் மாநில பொருளாதார மீட்சித் திட்டம் ஆகியவையும் அவற்றில் அடங்கும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இத்திட்டங்கள் வாயிலாக ஆயிரக்கணக்கானோர் பயனடைந்ததாக கூறிய அவர், பொதுமக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்த திட்டமாக உணவுக் கூடை திட்டம் அமைந்துள்ளதாகச் சொன்னார்.
மாநில அரசின் பொருளாதாரத் தொகுப்பின் ஒரு பகுதியாக அமல்படுத்தப்பட்ட உணவுக் கூடைத் திட்டத்தின் வழி 91,000 குடும்பங்கள் பயன்பெற்றது சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் அளித்த அறிக்கையின் வழி தெரியவந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
நேற்று இங்கு நடைபெற்ற 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் சிலாங்கூர் மாநில சமூகத் தலைவர்களுக்கு விளக்கமளித்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.