கோலாலம்பூர், அக் 12- அண்மைய சில வாரங்களாக நாட்டில் கோவிட்-19 நிலை சீரடைந்து வருவது நாடு எண்டமிக் கட்டத்திற்கு மாறுவதற்கு தயாராகி வருவதை உணர்த்துவதாக உள்ளது என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
கோவிட்-19 சம்பவங்களின் தினசரி எண்ணிக்கை வீழ்ச்சி, தொற்று மையங்கள் குறைந்தது, மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை குறைவு, தடுப்பூசி பெறுவோர் அதிகரிப்பு ஆகியவை நோய்த் தொற்று தணிந்து வருவதை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
ஒட்டு மொத்தமாக பார்க்கையில் தினசரி கோவிட்-19 எண்ணிக்கை, தீவிர பாதிப்பு எண்ணிக்கை, தீவிர சிகிசிசைப் பிரிவில் சேர்க்கப்படுவோரின் எண்ணிக்கை ஆகியவை 34 வது நோய்த் தொற்று வாரத்தில் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது என்றார் அவர்.
அக்டோபர் 3 முதல் 9 வரையிலான 40வது நோய்த் தொற்று வாரத்தில் 63,722 சம்பவங்கள் பதிவான வேளையில் அதற்கு முந்தைய 39 வது நோய்த் தொற்று வாரத்தில் 83,368 சம்பவங்கள் பதிவாகின. இது 23.6 விழுக்காடு குறைவாகும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த நேர்மறையான மாற்றங்களைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் தொடர்ந்து கவனப் போக்கை கடைபிடிக்க வேண்டும் என்பதோடு ஒரு போதும் அலட்சியாக செயல்படக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.