ஷா ஆலம், அக் 12- சிப்ஸ் எனப்படும் சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக உச்சநிலை மாநாடு 2021 வரும் நவம்பர் மாதம் 18 முதல் 21 ஆம் தேதி வரை ஹைப்ரிட் எனப்படும் பேராளர்களின் நேரடி பங்கேற்பு மற்றும் இயங்கலை முறையில் நடைபெறும்.
இந்த மாநாடு கோலாலம்பூர் அனைத்துலக மாநாட்டு மையத்தில் நேரடி பங்கேற்பின் வாயிலாகவும் சிலாங்கூர் வர்த்தக மையத்தில் இயங்கலை வாயிலாகவும் நடைபெறும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இந்த மாநாட்டில் தடுப்பூசி விவகாரம், மூத்த குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் இலக்கவியல் சுகாதாரம் ஆகிய அம்சங்கள் மீது கவனம் செலுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் மெடிக் எனப்படும் சிலாங்கூர் அனைத்துலக கண்காட்சி முக்கிய நிகழ்வாக அமையும் என்று மந்திரி புசாரை மேற்கோள் காட்டி அஸ்ட்ரோ அவானி தனியார் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த கண்காட்சியில் மருத்துவ கருவிகள், சுகாதார பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் மருத்துவமனைகள் வழங்கும் அதிநவீன மருத்துவ சேவைகள் இடம் பெறும் என்றும் அமிருடின் தெரிவித்தார்.
இது தவிர, ஸ்பார்க் 2021 எனப்படும் சிலாங்கூர் தொழிலியல் பூங்கா கண்காட்சியும் முதன் முறையாக இம்மாநாட்டையொட்டி நடத்தப்படுகிறது. சீராக திட்டமிடப்பட்ட தொழில்பேட்டை மேம்பாட்டாளர்கள் சங்கமிக்கும் களமாகவும் இது விளங்கும். மேலும், சீராக வடிவமைக்கப்பட்ட தொழில் பேட்டைக்கான நிலையான வழிகாட்டியும் இந்த மாநாட்டின் போது வெளியிடப்படும் என அவர் சொன்னார்.