ஷா ஆலம், அக் 13- சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் இன்று தொடங்கி நீர் விநியோகத் தடை அமல்படுத்தப்படுவதை முன்னிட்டு போதுமான அளவு நீரை சேகரித்து வைத்துக் கொள்ளும்படி பொதுமக்களை லுவாஸ் எனப்படும் சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.
சுங்கை சிலாங்கூர் முதல் கட்ட நீர் சுத்திகரிப்பு மையத்தில் இன்று முதல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதையொட்டி நீர் விநியோகம் தற்காலிகமாக தடை படும் என்று அந்த வாரியம் அறிக்கை ஒன்றில் கூறியது.
நான்கு நாட்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படும் இந்த நீர் விநியோகத் தடையை எதிர் கொள்வதற்கான சில ஆலோசனைகளை லுவாஸ் பொதுமக்களுக்கு வழங்கியுள்ளது.
போதுமான அளவு நீரை கலங்களில் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும், வர்த்தக அடிப்படையில் நீர் விநியோகம் செய்யப்படும் இடங்களை அறிந்திருக்க வேண்டும் மற்றும் உணவை முன்கூட்டியை சமைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இது தவிர, பாத்திரம், கரண்டி போன்ற பொருளுக்கு பதிலாக ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டும். போதுமான அளவு கனிம நீரை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். கைகளை கழுவ கிருமி நாசினையைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அந்த வாரியம் ஆலோசனை கூறியது.
நாளை தொடங்கி வரும் 16 ஆம் தேதி வரை பெட்டாலிங், கிள்ளான்/ஷா ஆலம், கோம்பாக், கோலாலம்பூர், உலு சிலாங்கூர், கோல லங்காட் மற்றும் கோல சிலாங்கூரை உள்ளடக்கிய 998 இடங்களில் நீர் விநியோகத் தடை ஏற்படும்.