ஷா ஆலம், அக் 13- துணை சூப்ரிண்டெண்டன் (டி.எஸ்.பி.) அந்தஸ்து கொண்ட உயர் போலீஸ் அதிகாரிக்கு எதிராக புகார் செய்யப்பட்டுள்ளதை சிலாங்கூர் மாநில போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அந்த உயர் போலீஸ் அதிகாரிக்கு எதிராக புகார் அளித்தவர் 36 வயது பெண்மணி என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ அர்ஜூனைடி முகமது கூறினார்.
அந்த உயர் அதிகாரிக்கு கடனாக கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட போது அந்த அதிகாரியால் தாம் அச்சுறுத்தலுக்கும் தாக்குதலுக்கும் ஆளானதாக அப்பெண்மணி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார் என அவர் தெரிவித்தார்.
இப்புகார் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதோடு இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இரு ஆடவர்கள் விசாரணக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.
இப்புகார் மீது குற்றவியல் சட்டத்தின் 323வது பிரிவு மற்றும் 506 வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் ஆருடங்களை வெளியிடுவதையும் சமூக ஊடகங்களில் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதையும் நிறுத்திக் கொள்ளும்படி பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த விசாரணை வெளிப்படையானதாகவும் முழுமையானதாகவும் இருக்கும் எனக் கூறிய அவர், விசாரணை மேற்கொள்வதில் உயர் போலீஸ் அதிகாரிகள் உள்பட எந்த தரப்பினரிடமும் சமரசம் செய்து கொள்ளப்படாது என்று உறுதியளித்தார்.