கோலாலம்பூர், அக் 16- நீண்ட வார இறுதி விடுமுறையாக இருந்த போதிலும் நாட்டிலுள்ள முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து சீராக காணப்படுகிறது.
வார இறுதி நாட்களுடன் சேர்ந்து வரும் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படவிருக்கும் மௌலிடுர் ரஸூல் விழாவை முன்னிட்டு கிள்ளான் பள்ளத்தாக்குவாசிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்படுவர் எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு கரை மாநிலங்களுக்கு செல்வதற்கான முக்கிய தடங்களாக விளங்கும் ஜாலான் டூத்தா டோல் சாவடி, கோம்பாக் டோல் சாவடி மற்றும் சுங்கை பீசி டோல் சாவடியில் வாகனப் போக்குவரத்து சற்று அதிகரித்து காணப்பட்டாலும் நிலைமை கட்டுப்பாட்டில் காணப்பட்டது.
கோம்பாக் டோல் சாவடியில் அதிக போக்குவரத்து நெரிசல் காணப்படாது எனத் தாம் கருதுவதாக சிலாங்கூர் மாநில போலீஸ் துறையின் விசாரணை மற்றும் போக்குவரத்து அமலாக்கப் பிரிவின் தலைவர் சூப்பிரிண்டெண்ன் அஸ்மான் ஷரியாட் கூறினார்.
முன்பு, இதுபோன்ற நீண்ட விடுமுறை காலங்களில் மாலை வேளைகளில் சாலைகளில் வாகனப் போக்குவரத்து அதிகரித்து காணப்படும். ஆனால் நிலைமை மாறுபட்டு காணப்படுகிறது. பொதுமக்கள் முன்கூட்டியே தங்கள் பயணத்தை திட்டமிட்டது இதற்கு காரணமாக இருக்கலாம் என்றார் அவர்.
நேற்று கோம்பாக் டோல் சாவடியில் வாகனப் போக்குவரத்து நிலவரங்களைப் பார்வையிட்டப் பின்னர்செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.