ஷா ஆலம், அக் 22- ஐந்து வாரங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த நடமாடும் செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டம் கடந்த 17 ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்ததாக சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.
மாநிலத்திலுள்ள 25 தொகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த தடுப்பூசித் திட்டத்தின் வழி 4,000 அந்நிய நாட்டினர் உள்பட 13,238 பேர் தடுப்பூசியைப் பெற்றதாக அவர் சொன்னார்.
சுங்கை துவா, உலு பெர்ணம், சிஜங்காங், கோல குபு பாரு, புக்கிட் லஞ்சான், பண்டார் உத்தாமா, கின்ராரா, தஞ்சோங் சிப்பாட், பத்தாங் காலி ஆகிய தொகுதிகளில் இந்த நடமாடும் தடுப்பூசித் திட்டம் மேற்கொள்ளப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.
அபரிமித வரவேற்பு கிடைத்த காரணத்தால் பத்து தீகா, டிங்கில், பண்டார் பாரு கிள்ளான், ஆகிய தொகுதிகளில் இரு முறை இந்த தடுப்பூசித் திட்டம் மேற்கொள்ளப்பட்டது என்றார் அவர்.
அடுத்ததாக நாங்கள் 12 முதல் 17 வயது வரையிலான இளையோருக்கு தடுப்பூசி செலுத்துவதில் தீவிரம் காட்டவிருக்கிறோம். இத்திட்டம் வரும் நவம்பர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் சிலாங்கூர் கினியிடம் தெரிவித்தார்.
தடுப்பூசி பெறுவதிலிருந்து மாநில மக்கள் யாரும் விடுபடக்கூடாது என்பதற்காக கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி முதல் பஸ் மற்றும் வேன்கள் மூலம் இந்த நடமாடும் தடுப்பூசி இயக்கம் மேற்கொள்ளப்பட்டது என்று அவர் சொன்னார்.