ஷா ஆலம், அக் 23- இவ்வாண்டு இறுதிக்குள் சுமார் 3,000 உறுப்பினர்களை பதிவு செய்ய “செர்வ்“ எனப்படும் சிலாங்கூர் தன்னார்வலர் அமைப்பு திட்டமிட்டுள்ளதாக அந்த சமூக மற்றும் தொண்டூழிய அமைப்பின் நிர்வாக உறுப்பினர் டெனிஸ் ஹைருடின் கூறினார்.
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் இந்த அமைப்புக்கு உறுப்பினர்களைச் சேர்ப்பதன் மூலம் பேரிடர் சமயங்களில் விரைவாகவும் ஆக்ககரமான முறையிலும் உதவிகளை வழங்குவதற்குரிய வாய்ப்பு கிடைக்கும் என்று அவர் சொன்னார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் சம்பந்தப்பட்ட தொகுதிகளின் சேவை மையத்திற்கு துணையாக இந்த செர்வ் அமைப்பு என்று அவர் தெரிவித்தார்.
மக்களுக்கான சமூகப் பணிகளை மேற்கொள்ளக்கூடிய தளமாக இந்த செர்வ் அமைப்பு விளங்குகிறது. எந்தச் சூழலிலும் செயல்படக்கூடிய ஆற்றலை கொண்டுள்ள காரணத்தால் இந்த செர்வ் அமைப்பின் பணித் திறனை அனைவரும் விரும்புகின்றனர் என்றார் அவர்.
இந்த செர்வ் அமைப்பில் இணைந்து பணியாற்ற சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ரா ஜெயா மக்களுக்கு வாயப்பு வழங்குகிறோம். புதிய அனுபவத்தைப் பெறுவதற்கு ஏதுவாக அவர்களுக்கு உரிய பயிற்சிகளை வழங்குகிறோம் என்று அவர் மேலும் சொன்னார்.
மீடியா சிலாங்கூர் வாயிலாக ஒளிபரப்பான “செர்வ் அமைப்பை அறிவோம்- சிலாங்கூர் தன்னார்வலர்கள்“ எனும் தலைப்பிலான கலந்துரையாடல் நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்தார்.
பேரிடர் சமயங்களில் சேவை வழங்குவதற்கு ஏதுவாக சிலாங்கூர் மாநில பேரிடர் மேலாண்மைக் பிரிவின் கீழ் இந்த செர்வ் அமைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.