பெட்டாலிங் ஜெயா, அக் 30- சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் திட்டத்தின் கீழ் பெரியவர்கள் மற்றும் இளையோருக்கு ஒரே இடத்தில் தடுப்பூசி செலுத்தும் இயக்கம் இன்று புளோரா டாமன்சாராவில் நடைபெற்றது.
இந்த இயக்கத்திற்கு பொதுமக்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்ததாக தடுப்பூசி மையத்தின் தலைவர் முகமது அய்டிட் இட்ரிஸ் கூறினார்.
தடுப்பூசி செலுத்துவதற்கு தங்கள் பிள்ளைகளை அழைத்து வந்த பெற்றோர்களில் சிலர் தங்களுக்கும் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக அவர் தெரிவித்தார்.
குறைந்தது பத்து குடும்பத்தினர் அதாவது தாய், தந்தை மற்றும் பிள்ளை ஆகியோர் ஒரே நேரத்தில் தடுப்பூசியை பெற்றுக் கொண்டனர். இன்னும் தடுப்பூசி பெறாத பெற்றோர்கள் நாளை பண்டமாரானில் நடைபெறும் இயக்கத்திற்கு தங்கள் பிள்ளைகளை தடுப்பூசி செலுத்த அழைத்து வரும் போது தாங்களும் தடுப்பூசி பெற்றுக் கொள்வர் என எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.
புளோரா டாமன்சாரா தடுப்பூசி மையத்தில் நடைபெற்ற தடுப்பூசி இயக்கத்திற்கு 600 தடுப்பூசிகள் தயார் செய்யப்பட்டிருந்ததாக கூறிய அவர், இன்று பிற்பகல் வரை 300 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு விட்டன என்றார்.