தஞ்சோங் சிப்பாட், நவ 1- கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடந்தாண்டு முதல் இவ்வாண்டு அக்டோபர் வரை தஞ்சோங் சிப்பாட் தொகுதி மூலம் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு உணவுக் கூடைகள் வழங்கப்பட்டுள்ளன.
பெருந்தொற்றினால் நாடு பாதிக்கப்பட்ட காலந்தொட்டு குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினர், வணிகர்கள் மற்றும் தனித்து வாழும் தாய்மார்களுக்கு இந்த உணவுப் பொருள்கள் பகர்ந்தளிக்கப்பட்டதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் புர்ஹான் அமான் ஷா கூறினார்.
நோய்த் தொற்றுப் பரவலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவி கிடைப்பதை தாங்கள் உறுதி செய்ய விரும்புவதாக அவர் தெரிவித்தார். புறநகர்ப் பகுதியில் வசிக்கும் இத்தொகுதி மக்கள் வீட்டு வாடகை போன்ற பிரச்சனைகளை எதிர்நோக்காவிட்டாலும் வர்த்தகத்தை முழுமையாக நம்பியிருக்கும் இவர்களுக்கு உதவவேண்டிய கடப்பாடு உள்ளது என்றார் அவர்.
இங்குள்ள பத்து லாவுட் கடற்கரையை தூய்மைப் படுத்தும் இயக்கத்தில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார். கடந்த ஈராண்டுகளாக கோவிட்-19 நோய்த் தொற்று பாதிப்பினால் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வரும் மக்களுக்கு மாநில அரசு பல்வேறு உதவித் திட்டங்கள் மூலம் 100 கோடி வெள்ளியை செலவிட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறியிருந்தார்.