சிப்பாங், நவ 2– கோவிட்-19 சுயப் பரிசோதனை கருவிகள் குறைந்த பட்சம் வெ.6.90 விலையில் கிடைக்கும் என்று உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி கூறினார்.
இந்த கருவியை பேரங்காடிகள் பல்வகை பொருள் விற்பனைக் கடைகள் மற்றும் பெட்ரோல் நிலையங்களில் விற்கும் நடவடிக்கை கட்டங் கட்டமாக விரிவுபடுத்தப்படவுள்ளதால் இந்த விலை குறைப்பு சாத்தியமாகும் என்று அவர் சொன்னார்.
பேரங்காடிகள் மற்றும் இதர கடைகளில் இந்த கருவி வெ.6.90 விலையிலும் கே.கே. சூப்பர் மார்க்கெட்டுகளில் வெ.6.60 விலையிலும் விற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்புச் சூழலில் இது உண்மையிலே நல்ல செய்தியாகும் என்றார் அவர்.
கே.எல்.ஐ.ஏ. 2 இல் உள்ள கே.கே. சூப்பர் மார்க்கெட்டில் கோவிட்-19 சுயப் பரிசோதனை கருவியின் விற்பனையை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த வருகையின் போது அவர், தீபாவளிப் பெருநாள் விலை உச்ச வரம்பு அமலாக்கத்தையும் பார்வையிட்டார்.
முன்னதாக, இந்த சுயப் பரிசோதனைக் கருவிகளை தேர்ந்தெடுக்கப்பட்ட கிளினிக்குகளிலும் மருந்தகங்களிலும் மட்டும் விற்பதற்கு மலேசிய மருத்துவ உபகரண நிர்வாக அனுமதியளித்திருந்தது.
இந்த கருவியின் மொத்த விலை வெ.16.00 ஆகவும் சில்லரை விலை வெ.19.90 ஆகவும் நிர்ணயிக்கப்படுவதாக அரசாங்கம் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி கூறியிருந்தது.