ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

முன்களப் பணியாளர்களுக்கு உணவுப் பொட்டலங்கள்- செந்தோசா தொகுதி வழங்கியது

ஷா ஆலம், நவ 2- வரும் வியாழக்கிழமை கொண்டாடப்படவிருக்கும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு 150 இந்திய முன்களப் பணியாளர்களுக்கு தீபாவளி பலகாரங்கள் மற்றும் பானங்கள் அடங்கிய பொட்டலங்கள் செந்தோசா தொகுதி சார்பில் விநியோகிக்கப்பட்டன.

தலா ஐம்பது வெள்ளி மதிப்பிலான இந்த உணவுப் பொட்டலங்கள் தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைமையகம், அண்டலாஸ் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, கிள்ளான் மாவட்ட சுகாதார அலுவலகம் ஆகிய இடங்களில் பணியாற்றும் இந்தியப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்  குணராஜ் ஜோர்ஜ் கூறினார்.

கோவிட்-19 பெருந்தொற்றுப்  பிரச்சனைக்குத்  தீர்வு காண்பதில் நேரம் காலம் பாராமல் கடுமையாகப் பாடுபட்ட இந்த முன்களப் பணியாளர்களின் அர்ப்பணிப்பு உணர்வை பாராட்டும் வகையில் இந்த உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன என்றார் அவர்.

வேலை நிமித்தம் காரணமாக பலர் தீபாவளியைக் கொண்டாடுவதற்கு தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ளதாக அறிகிறேன். எங்களின் இந்த சிறு அன்பளிப்பு அவர்களுக்கு மகிழ்ச்சியையும் புத்துணர்வையும் அளிக்கும் என நம்புகிறேன் என்று அவர் மேலும் சொன்னார்.


Pengarang :