ரவாங், நவ 4– செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜின் தீபாவளி பொது உபசரிப்பில் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கலந்து கொண்டது நாட்டின் நல்லிணக்கத்திற்கு எடுத்துக் காட்டாக விளங்குகிறது.
நாட்டில் காணப்படும் பல்வகைத் தன்மை அனைவரையும் ஒன்றிணைப்பதோடு பெருநாளை அனைவரும்இணைந்து கொண்டாடுவதற்கும் நன்மைகளைக் கொண்டு வருவதற்கும் துணை புரிகிறது என்று தொகுதி உறுப்பினர் டாக்டர் குணராஜ் கூறினார்.
கோவி,-19 நோய்த் தொற்று காரணமாக கடந்த 19 மாதங்களாக வீட்டிலேயே முடங்கி கிடந்தப் பின்னர் இப்போது தீபாவளியைக் கொண்டாடுவதற்கு வாய்ப்பு கிட்டியுள்ளது.
இருப்பினும், நாம் அனைவரும் கூடல் இடைவெளியைக் கடைபிடிப்பது, முகக்கவசம் அணிவது போன்ற எஸ்.ஒ.பி. விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
இங்குள்ள கன்றி ஹோம்ஸ் குடியிருப்பு பகுதியிலுள்ள தமது இல்லத்தில் நடைபெற்ற தீபாவளி பொது உபசரிப்பில் கலந்து கொண்ட மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரிக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மந்திரி புசார் தன் துணைவியார் டத்தின் ஸ்ரீ மஸ்டியானா முகமதுவுடன் நேற்று காலை 11.00 மணியளவில் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். சுமார் ஒரு மணி நேரத்தை இங்கு செலவிட்ட அவர், பிரியாணி, தோசை போன்ற பதார்த்தங்களையும் ருசித்து மகிழ்ந்தார்.